×

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்:ராமேஸ்வரத்தில் கி.வீரமணி பேச்சு

ராமேஸ்வரம், பிப்.28:  சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிணைந்து போராடுவோம் என திக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை நடைபெற்றது. திராவிடர் கழக மண்டல தலைவர் சிகாமணி தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் நகராட்சி தலைவரும், திமுக நகர் செயலாளர் நாசர் கான், துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர்.

கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை, இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்த பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு வழங்கி அவனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர் ஆகியுள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மோடி தெரிவித்தார். ஆனால் நாட்டில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. 2005ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் துவங்கப்பட்டு கடலில் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. 23 கிமீ தூரம் மட்டுமே இன்னும் தோண்ட வேண்டியுள்ளது. கடலுக்கு கீழ் இருக்கும் பாறைகளை உடைத்து அகற்ற முயன்ற போது அதனை ராமர் பாலம் எனறு கூறி திட்டத்தை தடுத்து நிறுத்தி விட்டனர்.

சமீபத்தில் பாராளுமன்றத்தில் ராமர் பாலத்தை தேசிய புனித சின்னமாக அறிவிப்பதில் ஏன் தாமதமாகிறது என்று பாஜ கட்சி எம்பிக்கள் கேட்டனர். அதற்கு அங்கு கடலில் பாலம் கட்டியதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜன.12ம் தேதி சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், ஈரோட்டில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. 2024ல் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி வழிகாட்டலை  இந்தியா எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டுபவராக இருக்கிறார் என்றார்.

Tags : Setu Samudra ,K. Veeramani ,Rameswaram ,
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...